தெலங்கானாவில் சிறப்புக் காட்சி மற்றும் டிக்கெட் விலை உயர்வுக்கு அனுமதி கிடையாது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 வெளியீட்டின்போது டிசம்பர் 4 அன்று ஹைதராபாதில் சிறப்புக் காட்சியைத் திரையிட்ட சந்தியா திரையரங்கில் படம் பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் வெளியே வந்தார்.
திரைத் துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகள் மற்றும் பெரிய படங்களுக்கு கூடுதல் டிக்கெட் விலை உள்ளிட்டவற்று அனுமதி வழங்கப்படாது என அறிவித்தார்.
இந்த நிலையில், தெலுங்கு திரைத் துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது பிரபல தயாரிப்பாளரும் தெலங்கானா திரைத் துறை வளர்ச்சிக் கழகத் தலைவருமான தில் ராஜு.
அப்போது தெலுங்கு திரைத் துறைக்குப் பக்கபலமாக தெலங்கானா அரசு இருக்கும் என்றும் சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் தெலுங்கு திரைத் துறையினரிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தெலுங்கு திரை நட்சத்திரங்கள் தங்களுடைய ரசிகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் இதற்கு தெலுங்கு திரைத் துறை பொறுப்பேற்க வேண்டும் என ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
தெலுங்கு திரைத் துறை குறித்து ரேவந்த் ரெட்டி பேசுகையில், ஹைதராபாதை சர்வதேச திரைப்பட மையமாக மாற்றி, ஹாலிவுட் திரைத் துறையினர் இங்கு வந்து படம் எடுக்கும் வகையில் தெலுங்கு திரைத் துறையை உலக அளவில் உயர்த்த தெலுங்கு திரைத் துறை மற்றும் தெலங்கானா அரசு இணைந்து செயல்பட வேண்டும் என தொலைநோக்குப் பார்வையையும் ரேவந்த் ரெட்டி பகிர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தில் ராஜு கூறியதாவது:
"சிறப்புக் காட்சிகள், டிக்கெட் விலை உயர்வுக்கு இனி அனுமதி கிடையாது. இவை மிகச் சிறிய பிரச்னைகள். இந்த விவகாரம் குறித்து பின்னர் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், திரைத் துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பார்வையை முதல்வர் பகிர்ந்துகொண்டார். ஹைதராபாதை சர்வதேச திரைப்பட மையமாக மாற்ற வேண்டும் என்றார். திரைத் துறையினரால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்றார் தில் ராஜு.
முதல்வர் ரேவந்த் ரெட்டியுடனான சந்திப்பில் நாகார்ஜுனா, வருண் தேஜ், கல்யாண் ராம், சிவ பாலாஜி, நிதின், வெங்கடேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கெடுத்தார்கள்.