
கங்குவா படம் வெளியாக இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், அப்படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பல படங்களின் தயாரிப்புக்காக வாங்கிய ரூ. 99.22 கோடியில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை முழுமையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதைத் தொடர்ந்து, கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கங்குவா படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஃபியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் தங்களுக்கு ரூ.1.60 கோடி பாக்கிப் பணத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், அதனை வழங்காமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஃபியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடி பணத்தை வழங்க வேண்டும் என்றும், அப்பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.