
செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் நயன்தாரா
நடிகை நயன்தாரா சமீபத்தில் செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அதில், செம்பருத்தி தேநீர் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதனை தனது உணவுத் திட்டத்தில் சேர்த்தது ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுவதாகவும், அதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு லிவர் டாக் என்கிற மருத்துவர் ஒருவர் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், “பிரபல நடிகை நயன்தாரா, சமந்தாவை விட இரண்டு மடங்கு அதிகமான ஆதரவாளர்களைப் பெற்றுள்ளார்.
செம்பருத்தி தேநீர் குடிப்பதால் சர்க்கரை நோய் உட்பட சில பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று அவர் சொன்னது மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை” என்றார்.
சமீபத்தில், ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்ட ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இந்த பதிவுக்கும் லிவர் டாக் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால் என்பவர் செம்பருத்தி தேநீரை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா இதனை மீண்டும் பதிவிட்டு, “செம்பருத்தி தேநீர் குறித்து யாருக்கெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ, இந்த பதிவை படியுங்கள்” என்றார்.
சமந்தாவைத் தொடர்ந்து நயன்தாராவின் பதிவுக்கும் பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.