மிகவும் பிடித்த படம் மெய்யழகன்: உணர்வைப் பகிர்ந்துகொண்ட நானி

"அப்படியொரு அழகான படம் மெய்யழகன்."
மிகவும் பிடித்த படம் மெய்யழகன்: உணர்வைப் பகிர்ந்துகொண்ட நானி
ANI
1 min read

பத்து ஆண்டுகளில் தனக்கு மிகவும் பிடித்த படம் மெய்யழகன் என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

நானி நடித்துள்ள ஹிட் 3 படம் மே 1 அன்று வெளியாகிறது. ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் விளம்பரப் பணிகள் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலும் படம் வெளியாகவுள்ள நிலையில், விளம்பரப் பணிகளின் பகுதியாக தமிழ் ஊடகங்களுக்கும் நானி பேட்டியளித்து வருகிறார்.

விகடனுக்கு நானி மற்றும் கேஜிஎஃப் புகழ் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நேர்காணல் கொடுத்தார்கள். இதில் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான மெய்யழகன் படம் தனக்கு எந்தளவுக்குப் பிடித்தது என்று நானி பகிர்ந்துகொண்டார்.

"தமிழ் சினிமாவை மறந்துவிடுங்கள். பத்து ஆண்டுகளில் வந்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மெய்யழகன். அப்படியொரு அழகான படம் மெய்யழகன். பிரமாண்ட அரங்கை உருவாக்கலாம், ரூ. 1,000 கோடி செலவழிக்கலாம்.. ஆனால், இந்தப் படம் ஒரு மேஜிக். படம் எந்தளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது என்பதை கார்த்தியை அழைத்து பகிர்ந்துகொண்டேன். காலத்துக்கு அழியாத ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் பிரேம். அதுவொரு கிளாசிக். அந்தப் படத்தைப் பற்றி நினைத்தாலே நான் மகிழ்ச்சியாகிவிடுவேன்" என்றார் நானி.

96 புகழ் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடித்து கடந்தாண்டு வெளியான படம் மெய்யழகன். மிகவும் உணர்வுபூர்வமான உரையாடலைக் கொண்டே படத்தை நகர்த்தியிருந்ததும் படத்தில் உறவுகளைப் பற்றி பேசியிருந்தது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in