‘கருத்த மச்சான்’ பாடல் விவகாரம்: வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம் | Dude | Ilaiyaraaja |

இளையராஜா தரப்பும் படத் தயாரிப்பாளர்கள் தரப்பும் சமரசம் செய்துகொண்ட நிலையில்...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
1 min read

டியூட் படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடலைப் பயன்படுத்தும் விவகாரத்தில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்ட நிலையில் வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி வருவதாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு தொடர்ந்து வருகிறார்.

குறிப்பாக சோனி நிறுவனம் மீது அவர் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான டியூட் படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான கருத்த மச்சான் மற்றும் நூறு வருஷம் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மனுவில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் கடந்த நவம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவின் அனுமதி இன்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறி, டியூட் படத்தில் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. அதன்பின் அடுத்த நாள் அந்த மனு குறித்து நீதிபதி, "இளையராஜாவின் பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும்” என்று இடைக்கால உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இளையராஜா தொடர்புள்ள வழக்குகள் அவரது அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது குட் பேட் அக்லி விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தார். அப்போது அதே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான மற்றொரு படமாக டியூட் படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். அவருக்கு படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்று மைத்ரி மூவீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

Summary

The Madras High Court has ruled that the case regarding the use of Ilayaraja's song in the film Dude has been closed after both parties reached a compromise.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in