கார் பந்தயத்தைக் காண இவ்வளவு ரசிகர்கள் கூடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர்களை அளவுகடந்து நேசிக்கிறேன் என அஜித் குமார் பேட்டியளித்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை உருவாக்கியுள்ள அஜித் குமார், துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸில் பங்கெடுக்கிறார். அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைக் காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளார்கள். போட்டியை நடத்துபவர்கள் அஜித் குமாருக்காகக் குவிந்துள்ள ரசிகர்களைக் கண்டு வியந்துள்ளார்கள். கார் பந்தயத்துக்கு மத்தியில் அஜித் குமாரிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டது. அவரும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"உண்மையில், இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்.
நடிப்பும், கார் பந்தயமும் ஒன்று தான். இரண்டுக்கும் உடல் அளவிலும் மனதளவிலும் உழைப்பு தேவை. எனவே, நாம் எப்படி ஒவ்வொன்றையும் பிரித்து அணுகுகிறோம், சரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் உள்ளது. எனக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்வது பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். அனைத்து வழிகளிலும் இது சிறந்தது.
நான் இரு படங்களில் நடித்து முடித்துள்ளேன். இரண்டு படங்களும் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. ஒரு படம் ஜனவரியில் வெளியாகும். மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும். கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவதற்கான அவகாசத்தை இது கொடுக்கும்.
இவர்களைப் (ரசிகர்கள்) பாருங்கள். அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்" என்றார் அஜித் குமார்.