
மலையாளத் திரையுலகில் ரூ. 300 கோடியை எட்டிய முதல் படம் என்கிற பெருமையை கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1 படம் பெற்றுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் லோகா சாப்டர் 1. உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் 28 -ல் வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தது. அசாத்திய சக்திகளைக் கொண்ட நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தது அதிகக் கவனம் பெற்றது. ஆக்ஷன் காட்சிகளும் பின்னணி இசையும் பாராட்டப்பட்டன.
சுமார் ரூ. 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 300 கோடியை எட்டிய முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு மோகன்லாலின் எல் 2: எம்புரான் படம் குவித்த ரூ. 262 கோடி வசூலை இப்படம் முறியடித்துள்ளது.
இதுகுறித்து மம்முட்டியின் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
”கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த படமாக லோகா ஆகியுள்ளது. இந்தத் தருணத்தை ஒவ்வொரு திரையிலும், ஒவ்வொரு டிக்கெட் மூலமும் சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. எங்களுடன் சேர்ந்து வரலாறு படைத்த கேரள ரசிகர்களுக்கும் நன்றி” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று, படக்குழு அடுத்த பாகத்தின் போஸ்டரையும் 3 நிமிட முன்னோட்டக் காட்சியையும் வெளியிட்டு லோகா சாப்டர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.