
குடும்பஸ்தன் படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி மாரடைப்பால் காலமானார்.
தெனாவட்டு, குட்டி புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம் டா மாப்ள, ஜெயில், அநீதி, மத்தகம் போன்ற தமிழ் படங்களில் கலை இயக்குநனராகப் பணியாற்றியுள்ளார் சுரேஷ் கல்லேரி. கடைசியாக, மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குடும்பஸ்தன் படத்தில் அவர் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ளார் சுரேஷ் கல்லேரி. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகின் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.
சுரேஷ் கல்லேரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தன் முகநூல் கணக்கில் இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது,
`என்னுடைய ஜெயில் மற்றும் அநீதி திரைப்படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி நேற்று மாரடைப்பால் காலமானார். என்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறவர். என்னுடன் பணிபுரிய அத்தனை ஆசைஆசையாக கைகோர்க்கும் கலை இயக்குநர். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த குடும்பஸ்தன் திரைப்படத்தின் கலை இயக்குநர்.
அநீதி திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரமான அந்த கலை நயமிக்க கதவு அவரின் கலைக்குச் சான்று. இந்த திரையுலகில் ஜீரோ பட்ஜெட் கலை இயக்குநர் என்றால் அது சுரேஷ் கல்லேரிதான். மனம் கனந்து கிடக்கிறது. இன்று மாலை இறுதி சடங்கு ஏவிஎம் இடுகாட்டில் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் கலந்து கொள்ளவும்’ என்றார்.