
நான் சம்பாதித்த என் சொந்தக் காசில் மட்டும்தான் அடுத்தவர்களுக்கு உதவிகளைச் செய்கிறேன் என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
நடிகர் பாலாவின் நடிப்பில் காந்தி கண்ணாடி படம் நேற்று (செப். 5) வெளியானது. இதையொட்டி செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பாலா மற்றவர்களிடம் பணம் வாங்கித்தான் உதவிகளைச் செய்து வருகிறாரா என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு விளக்கமளித்தார். அதுகுறித்து அவர் கூறியதாவது :
”நான் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்து வந்த என் சொந்தப் பணத்தில்தான் இதுவரை உதவிகளைச் செய்து வருகிறேன். இதை நான் உதவி என்று கூடச் சொல்லமாட்டேன். என் கடமையைச் செய்து வருவதாகவே கருதுகிறேன். இதுவரை நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கிக் கொண்டு அடுத்தவர்க்கு உதவுவதில்லை. என் சம்பளத்தில்தான் நான் உதவி செய்கிறேன். நான் பணம் வாங்கிக் கொண்டு உதவி செய்வதாக எழும் விமர்சனம் என்னைப் பாதிக்கவில்லை. ஏனென்றால் நான் அப்படிச் செய்வதில்லை. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சொல்வது போல் விமர்சனங்களை இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிட்டு என் குறிக்கோளை நோக்கி மட்டுமே நான் செல்கிறேன். நான் இங்கே நிற்பதற்கு தமிழக மக்கள்தான் காரணம்” என்று பேசினார்.
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்குப் போட்டியாக காந்தி கண்ணாடி வெளியாகிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு - “சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர். மூத்த நடிகர். நான் இப்போதுதான் முதல் படத்தில் நடித்திருக்கிறேன். மதராஸிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் காந்தி கண்ணாடிக்கு வந்து பார்ப்பார்களே என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த நாளைத் திட்டமிட்டு வெளியிடவில்லை. தானாக அமைந்துவிட்டது” என்று பதிலளித்தார்.
Gandhi Kannadi | KPY Bala | Kollywood |