
அரண்மனை படத்தின் 5-வது பாகம் குறித்து வெளியான அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘அரண்மனை’. ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2016-ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து 2021-ல் இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது.
4-வது பாகம் கடந்த மே 3 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு போன்ற பலரும் நடித்தனர். இசை - ஹிப்ஹாப் ஆதி. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து, 2024 -ல் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை அடைந்தது.
இந்நிலையில் அரண்மனை 5 படம் உருவாகுவதாக ஒரு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதன் தொடர்ச்சியாக அது அதிகாரபூர்வ தகவல் இல்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு தெரிவித்துள்ளதாவது:
“தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் வெற்றிப் படமாக அமைந்த அரண்மனை படத்தின் 5-வது பாகம் குறித்து ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள், நடிகர்கள், முதல் பார்வை போஸ்டர் உள்பட அனைத்தும் பொய்யானது. ஒருவேளை இப்படத்தை உருவாக்கும் எண்ணம் இருந்தால் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.