கங்கனா ரணாவத் - ஜாவெத் அக்தர் இடையே சுமூகம்: முடிவுக்கு வந்த அவதூறு வழக்கு!

கங்கனா ரணாவத் - ஜாவெத் அக்தர் இடையே சுமூகம்: முடிவுக்கு வந்த அவதூறு வழக்கு!

"அடுத்தப் படத்துக்குப் பாடல் எழுதுவதாகவும் ஜாவெத் அக்தர் ஒப்புக்கொண்டார்."
Published on

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் இடையே சுமூகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 ஆண்டுகால அவதூறு வழக்கு முடிவுக்கு வந்தது.

பாலிவுட்டில் ரித்திக் ரோஷன் - கங்கனா ரணாவத் இடையிலான மோதல் ஊரறிந்தது. 2016-nd இருவரும் வெளிப்படையாகவே சண்டையிட்டுக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் பேசிய கங்கனா ரணாவத், ரித்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக, ஜாவெத் அக்தர் தன்னை அச்சுறுத்தியதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ரித்திக் ரோஷனுடனான மோதலில் தன் பெயரை இழுத்ததாகக் கூறி கங்கனா ரணாவத் மீது ஜாவெத் அக்தர் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கங்கனா ரணாவத்தும் ஜாவெத் அக்தர் மீது பதிலுக்குப் புகாரளித்தார். இதனால் சட்டப் போராட்டம் வலுத்தது. 5 ஆண்டுகளாகியும் இது நீடித்து வந்தது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கங்கனா ரணாவத் - ஜாவெத் அக்தர் சமாதானம் ஆகியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஜாவெத் அக்தர் உடனான வழக்கை இருவரும் பேசித் தீர்த்துவிட்டதாக கங்கனா ரணாவத் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். ஜாவெத் அக்தர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கங்கனா இதைத் தெரிவித்துள்ளார்.

"நானும் ஜாவெத் அக்தரும் எங்களுடையச் சட்டப் பிரச்னையைப் (அவதூறு வழக்கு) பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டோம். என்னுடைய அடுத்தப் படத்துக்குப் பாடல் எழுதுவதாகவும் ஜாவெத் அக்தர் ஒப்புக்கொண்டார்" என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் தற்போது மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in