
தமிழ்த் திரைத் துறையில் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பல்வேறு அடையாளங்களைக் கொண்ட கலைப்புலி ஜி. சேகரன் (73) காலமானார்.
தமிழ்த் திரைத் துறையில் நிதி வழங்குபவராகவும் திரைப்பட விநியோகஸ்தராகவும் பயணத்தைத் தொடங்கினார் ஜி. சேகரன். கலைப்புலி எஸ். தாணு மற்றும் சூரி ஆகியோருடன் இணைந்து கலைப்புலி ஃபிலிம்ஸின் பங்குதாரர் ஆனார். தாணு தயாரிப்பிலேயே யார் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் 100 நாள்களைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. இதில் எதிர்மறைக் கதாபாத்திரமாக நடித்தது மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதாகவும் பேட்டியொன்றில் அவர் தெரிவித்தார்.
1988-ல் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து காவல் பூனைகள், உளவாளி ஆகிய படங்களையும் ஜி. சேகரன் இயக்கினார். பிறகு, ஜமீன் கோட்டை மற்றும் குடும்பச் சங்கிலி படங்களில் கதாநாயகராக நடித்தார். மேலும், விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் சேகரன் இருந்துள்ளார்.
இசையமைப்பையும் விட்டுவைக்காத ஜி. சேகரன், மாளவிகா நடித்த கட்டுவிரியன் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை மற்றும் இயக்கம் அனைத்தும் கலைப்புலி ஜி. சேகரன் தான்.
இவர் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகல் காலமானார். இவருடைய மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய உடல் ராயப்பேட்டையிலுள்ள இல்லத்தில் மாலை 5 மணிக்கு மேல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.