
மோகன்லால் நடிப்பிலும், பிரித்விராஜ் இயக்கத்திலும் கடந்த மார்ச் 27 அன்று வெளியான எம்புரான் படத்தைப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
எம்புரான் படம் தொடர்பாக தன் இணையத்தளத்தில் இன்று (ஏப்.12) எழுதிய பதிவில் ஜெயமோகன் கூறியதாவது,
`எர்ணாகுளத்தில் ஒரு ‘மால்’ பக்கமாக லாந்திக்கொண்டிருந்தபோது எம்புரான் படம் ஓடுவதைக் கண்டேன். திரைக்கதையை எழுதியவர் என் நண்பர் முரளி கோபி. ஆகவே கொஞ்சம் தயங்கியபின் உள்ளே நுழைந்தேன். ஏற்கனவே இங்கே தமிழ்நாட்டில் படம் பார்த்த பலர் படம் பற்றி பல எதிர்மறை அபிப்பிராயங்களை எழுதியிருந்தனர்.
முதற்காட்சி முதல் நான் முழுமையாகவே படத்திற்குள் சென்றுவிட்டேன். இத்தகைய மிகவிரிந்த காட்சியமைப்புகள பிற இந்திய சினிமாக்களில் எடுக்க முடியாது. எம்புரானில் தொடக்கக் காட்சியான இராக்கில் நிகழும் போர் எந்த ஹாலிவுட் சினிமாக்களுக்கும் நிகரானது. எம்புரான் ஒரு வழக்கமான ‘சூப்பர் ஹீரோ’ சினிமா.
மிகச்சிறிய கதை, இறுதியில் நேரடியான அடிதடியில் முடியும் உச்சக்கட்டம் என இத்தகைய சினிமாக்களுக்குள்ள எல்லா இலக்கணங்களும் மிகச்சரியாகப் பொருந்திய படம்.
முதல் காட்சி ‘சம்பந்தமில்லாமல்’ ஆரம்பிக்கிறது. நேரடியாக குஜராத் கலவரத்திலும் அங்கிருந்து கேரள அரசியலுக்குள்ளும் நுழைகிறது. அங்குள்ள பிரச்சினைகள் வழியாக சர்வதேச அளவிலான குற்றவுலகுடன் இணைந்து விரிகிறது.
நாம் நம் அரசியலை, பொருளியல் நாமறிந்த சிறிய நில எல்லைக்குள் நிறுத்திக்கொண்டு புரிந்துகொள்கிறோம், ஆனால் அது உலகளாவ பின்னி விரிந்துகிடக்கும் ஒரு பெரும் வலையின் ஒரு கண்ணிதான். மொத்தப்படமும் அந்த வலையையே காட்டிக்கொண்டிருக்கிறது – கடைசிக் காட்சிவரை.
ஆனால் தமிழில் எழுதப்பட்ட பல விமர்சனங்களைப் பார்க்கையில் அவர்கள் அந்த உலகளாவ விரியும் வலை என்னும் கருத்தை அடையவே இல்லை என்று தெரிகிறது. இப்படம் ‘மெதுவாகச் செல்கிறது’ என்று சொல்பவர்கள் எதைச் சொல்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
இப்படத்தில் ஒரு காட்சிகூட வீண் அல்ல. எல்லா காட்சிகளும், எல்லா வசனங்களும் நுட்பமாக கோக்கப்பட்டுள்ளன. ஒரு காட்சி இன்னொன்றுடன் இயல்பாக இணையும் இடத்தில் இயக்குநர் பிருத்விராஜின் திறன் தெரிகிறது. படம் முடிந்தபின் நினைவில் நின்றது மிகச்சரியாக கோக்கப்பட்ட திரைக்கதையின் ஒருமைதான். முரளி கோபியை அழைத்து பாராட்டினேன்’ என்றார்.
எம்புரான் குறித்த ஜெயமோகனின் பதிவுக்கு: