மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகல்: ஜெயம் ரவி

"இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்."
படம்: https://x.com/actor_jayamravi
படம்: https://x.com/actor_jayamravi
1 min read

மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் ஜூன் 4, 2009-ல் காதல் திருமணமாக நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளார்கள். அண்மைக் காலமாகவே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கினார். இதனால், இதுகுறித்து பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடையப் பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத் துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னைச் சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடையத் தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in