

ஜன நாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
விஜயின் கடைசி படமாகச் சொல்லப்படும் ஜன நாயகன் ஜனவரி 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தணிக்கைக் குழு உறுப்பினர் தணிக்கைச் சான்றுக்குப் பரிந்துரைத்த பிறகு, அதை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தக் குழப்பம் காரணமாக, ஜன நாயகன் வெளியீடு அதிகாரபூர்வமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, வெள்ளிக்கிழமை காலை தணிக்கைச் சான்றிதழை வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் ஆஜரானார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு ஜனவரி 21 அன்று மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜன நாயகன் வெளியீடு மேலும் தாமதமானது.
இந்த நிலையில் தான், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Jana Nayagan | Jana Nayagan Release | Vijay | Supreme Court | Central Board of Film Certification | CBFC | Actor Vijay | KVN Productions |