கமல் வரும் ஒவ்வொரு காட்சியும் அனல் பறக்கும்: ‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர்
‘இந்தியன் 2’ படத்துக்காக அற்புதமான 6 பாடல்களை அனிருத் கொடுத்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஷங்கர். “இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா இருந்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் கதை. கமல் வரும் ஒவ்வொரு காட்சியும் அனல் பறக்கும் என நம்புகிறேன். முதல்முறையாக அனிருத்துடன் பணியாற்றுகிறேன். அற்புதமான 6 பாடல்களை அனிருத் கொடுத்துள்ளார்” என்றார்.
மேலும், இவ்விழாவில் பேசிய கமல், “என் வயதை விட 15 வயதுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம்” எனப் பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “ஷங்கர், அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்கிறார். இந்தியன் ஒரு பெரிய கதை, இப்படத்தில் மொத்தம் மூன்று பாகங்கள். இதே மாதிரியான ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்திருந்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா - மகன் என இரு வேடத்திலும் நடிக்கச் சொன்னார். என் வயதை விட 15 வயதுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். ஒரு முறை நடிகர் டி.ஆர். என்னைக் கட்டிப்பிடித்து, “நீங்க எல்லாம் சினிமாவை விட்டு போகக்கூடாதுனு அழுதார்”. நான் இங்கு நிற்பதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்” என்றார்.