இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில், பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாகக் கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்திம், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதன் பிறகு படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவர் நினைப்பதை ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில், “வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்தது தான் பாடல், வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. ஒருவேளை பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இவ்வழக்கின் விசாரணை ஜூன் 2-வது வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.