
நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து அனைத்து மதம், சாதிகளுக்கு மதிப்பளித்து அமைதியான ஒரு சமூகமாக வாழ்வோம் என அஜித் தெரிவித்துள்ளார்.
குடியரசு நாளையொட்டி ஆண்டுதோறும் கலைத் துறை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்படும். கலைத் துறை சார்பில் அஜித்துக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபடி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித். அவருடைய மனைவி ஷாலினி உள்ளிட்ட குடும்பத்தினர் அஜித் விருது பெறுவதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்தார்கள்.
இதன்பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அஜித், பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார்.
"பஹல்காம் தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன். அரசு தன்னால் முடிந்தவற்றைச் செய்கிறது. ஏதோவொரு காலக்கட்டத்தில் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள கற்றுக்கொண்டு அமைதியான சமூகமாக வாழ்வோம் என வேண்டிக் கொள்வோம்.
ராணுவப் படைகளைச் சேர்ந்த பலரை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தேன். அவர்களுடைய தியாகங்களுக்கு நாம் தலை வணங்குகிறோம். அவர்கள் கடுமையாக உழைப்பதனால்தான் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன். நம் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அவர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களுக்குச் செலுத்தும் மரியாதைக்காகவாவது நம் நாட்டில் ஒருவருக்கொருவர் நாம் மதிப்பளித்து, அனைத்து மதங்களுக்கும் மதிப்பளித்து அனைத்து சாதிகளுக்கும் மதிப்பளித்து நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அமைதியான ஒரு சமூகமாக வாழ்வோம்" என்றார் அஜித்.