
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் வரும் சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கில் அக்டோபர் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒட்டி ஆவணப்படம் ஒன்றை டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்தது. இது, கடந்த 2024 நவம்பரில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் அனுமதி இன்றி நானும் ரவுடி தான் பட காட்சிகளைப் பயன்படுத்தியதற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்த ஆவணப்படத்தில் ஏபி இண்டர்னேஷனல் நிறுவனம் சார்பில் தங்கள் அனுமதி பெறாமல் சந்திரமுகி படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆவணப்படத்தில் இருந்து சந்திரமுகி படக் காட்சிகளை நீக்க வேண்டும். ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ஆவணப் படம் மூலம் ஈட்டிய லாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி செந்தில் குமார் விசாரித்தார். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அக்டோபர் 6-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
Nayanthara | Dhanush | Nayanthara documentary | AP International | Chandramukhi |