பணத்தாசை இல்லை, அனுமதி பெற்றால் பாடல்கள் இலவசம்: கங்கை அமரன்

"அனுமதி பெறாமல் பாடல்களைப் பயன்படுத்துவதால் தான் இளையராஜாவுக்குக் கோபம் வருகிறது."
பணத்தாசை இல்லை, அனுமதி பெற்றால் பாடல்கள் இலவசம்: கங்கை அமரன்
2 min read

இளையராஜா பாடல்களை அனுமதி பெற்று பயன்படுத்தினால் இலவசம் தான், பணத்தாசையெல்லாம் கிடையாது என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் 1983-ல் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள இளமை இதோ இதோ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 1996-ல் வெளியான நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் மற்றும் 1986-ல் வெளியான விக்ரம் படத்தின் என் ஜோடி மஞ்சக் குருவி பாடல் ஆகியவையும் குட் பேட் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதியின்றி தன் பாடல்களைப் பயன்படுத்தியதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீஸில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்

  • அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்

  • குட் பேட் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்கள் நீக்கப்பட வேண்டும்.

  • அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இளையராஜாவின் இந்த நோட்டீஸைத் தொடர்ந்து, அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழத் தொடங்கின. வழக்கம்போல பணத்துக்காக இளையராஜா இப்படி செய்வதாக விமர்சித்தார்கள். இளையராஜாவுக்குப் பணம் முக்கியமல்ல, அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம் என ஆதரவுக் குரல்களும் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இளையராஜாவின் பாடல்களை அனுமதி பெற்று பயன்படுத்தினால் இலவசம் தான் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கங்கை அமரன் பேசியதாவது:

"இளையராஜா பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடலாம். அவர்கள் ராயல்டி கட்டத் தேவையில்லை. ரூ. 7 கோடி கொடுத்து ஒரு இசையமைப்பாளரை நியமித்தால், அவருடையப் பாடல்களுக்குக் கைத்தட்டல் வராமல் எங்களுடையப் பாடல்களுக்குக் கைத்தட்டல் வருகிறது.

நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடலுக்கு நீங்கள் நடனமாடினால் என்ன அர்த்தம்? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என்ற பாடலைப் பயன்படுத்துகிறார்கள். ரூ. 7 கோடி கொடுத்த நியமிக்கப்பட்ட இசையமைப்பாளரின் பாடல் ஹிட் அடிக்கவில்லை. எங்களுடையப் பாடல்களைப் போட்டவுடன் தான் கைத்தட்டல் வருகிறது. நான் எழுதிய என் ஜோடி மஞ்சக் குருவி பாடலைப் பயன்படுத்துகிறார்கள்.

எங்களுடையப் பாடல்களைப் போட்டவுடன் கைத்தட்டுகிறார்கள், விசில் அடிக்கிறார்கள், நடனமாடுகிறார்கள் என்றால் அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா? எங்களுடையப் பெயரைக் குறிப்பிடாமல், அவ்வளவு பணம் கொடுத்து இசையமைப்பாளரைப் போட்டு அவரிடமிருந்து இசையை வாங்க முடியாததால் தானே எங்களிடம் வாங்குகிறீர்கள். அப்படியென்றால் அதில் எங்களுக்குப் பங்கு இருக்கிறதல்லவா? எங்களுடையப் பங்கைக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? அனுமதி வாங்கியிருக்க வேண்டும் அல்லவா?

அனுமதி பெற்றால் பாடல்கள் உங்களுக்கு இலவசம் தான். அண்ணன் (இளையராஜா) கொடுத்துவிடுவார். அனுமதி பெறாமல் பாடல்களைப் பயன்படுத்துவதால் தான் அவருக்குக் கோபம் வருகிறது. பணத்தாசை கிடையாது. பணம் கொட்டிக் கிடக்கிறது. விதிப்படி நடக்க வேண்டும் என்பது தான் விஷயம்.

அஜித் படம் என்பதால் அல்ல. எங்களுடையப் பாடல் என்பது தான் விஷயம். உங்களுடைய இசையமைப்பாளரால் பாடல்களை இசையமைக்க முடியவில்லை. எங்களுடையப் பாடல்கள் தான் உங்களை வெற்றி பெற வைக்கிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இதுவே அனுமதி பெற்று பயன்படுத்தினால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியில் இருப்போம்" என்றார் கங்கை அமரன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in