
ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை அடிப்படையில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சுரான குழுமத்தின் துணை நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் பாக்யாநகர் பிராப்பர்ட்டிஸ் ஆகியவற்றின் ஹைதராபாத், செகந்தராபாத் அலுவலகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
இதில், ரூ. 100 கோடி அளவில் சட்டவிரோத பரிவர்த்தனை நடைபெற்றது கண்டறியப்பட்டது. அத்துடன் கணக்கில் வராத ரூ. 74.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுரானா குழுமத்தின் விளம்பரங்களில் தோன்றியதற்காக நடிகர் மகேஷ் பாபு ரூ. 5.9 கோடி பெற்றது இந்த சோதனையின்போது தெரியவந்தது.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் சார்பில் மகேஷ் பாபுவுக்கு ரூ. 2.5 கோடி ரொக்கமாகவும், ரூ. 3.4 கோடி செக் வழியாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரிக்க மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு (ஏப்.27) அன்று அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத நிலங்களை உள்ளடக்கிய மோசடித் திட்டங்களை செயல்படுத்தியது, ஒரே நிலத்தை வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது, முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் வாடிக்கையாயர்களிடம் பணம் பெற்றது, நிலப் பதிவுகள் குறித்த தவறான உத்தரவாதங்களை அளித்தது எனப் பல்வேறு முறைகேடுகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.