காக்க காக்க படத்தில் ஒரு வரி கூட நான் எழுதவில்லை: பட்டுக்கோட்டை பிரபாகர் விளக்கம்

“திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால், ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும்”
காக்க காக்க படம் குறித்து பட்டுக்கோட்டை பிரபாகர்
காக்க காக்க படம் குறித்து பட்டுக்கோட்டை பிரபாகர்

காக்க காக்க படத்தில் ஒரு வரி கூட நான் எழுதவில்லை என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் சாய் வித் சித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “காக்க காக்க படத்தின் கதையை எழுத பட்டுக்கோட்டை பிரபாகர் உட்பட பல எழுத்தாளர்களை அணுகினேன், முடிவில் நானே அந்த கதையை எழுதிவிட்டேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியதாவது:

“கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில், “நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால், நானே எழுதத் துவங்கினேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

காக்க காக்க திரைப்படத்தின்போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன்.

அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள். ஒரு படத்தில் திரைக்கதையும், வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை.

அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால், விளக்கம் தர வேண்டியதாகிறது. இந்த உண்மையை கவிஞர் தாமரையும் அறிவார்.

ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால், ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன்” என்றார்.

ஜெயம் கொண்டான், இமைக்கா நொடிகள், நான் அவன் இல்லை, கண்டேன் காதலை உட்பட பல தமிழ் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in