
குட் பேட் அக்லி படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சிம்ரன் ரசிகர்களிடத்தில் மீண்டும் அன்பைப் பெற்று வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, அஜித்துடன் இணைந்து சிம்ரனைப் பார்த்தது ரசிகர்களைப் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
இந்நிலையில் அந்தகன் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சியில் அவர் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
"அண்மையில், சக நடிகை ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். உங்களை இந்தக் கதாபாத்திரத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது என்றேன். அதற்கு அவர், 'வயது மூப்பு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு இதுவே மேல்' என்று பதிலளித்தார். இது முற்றிலுமாக பொறுப்பற்ற பதில். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. டப்பா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட வயதுமூப்பு கதாபாத்திரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த வயதுமூப்பு கதாபாத்திரங்களில் நடிக்கலாம். ஏற்கெனவே கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் இதைச் செய்துள்ளேன். நாம் எதைச் செய்ய விரும்புகிறோமோ அதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்" என்றார் சிம்ரன்.
சிம்ரனின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வரும் நிலையில், ஜோதிகாவை குறிப்பிட்டு தான் சிம்ரன் இவ்வாறு பேசியதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். காரணம், ஜோதிகா அண்மையில் டப்பா கார்டெல் இணையத் தொடரில் நடித்திருந்தார். இதை மனதில் வைத்தே டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வயதுமூப்பு கதாபாத்திரங்களில் நடிப்பதே மேல் என்று சிம்ரன் சொன்னதாக ரசிகர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
சிம்ரனின் காணொளி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.