
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில் ரூ. 2 கோடி செலுத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். குறிப்பாக, 2023-ல் வெளியான 2-ம் பாகத்தில் இடம்பெற்றிருந்த `வீரா ராஜ வீர’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால் இந்த பாடலை முன்வைத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023-ல் பிரபல பாடகர் உஸ்தாத் ஃபையாஸ் வாசிஃபுதீன் தாகர் வழக்கு தொடர்ந்தார். தனது தந்தை நசீர் தாகர் மற்றும் மாமா ஸாஹிருத்தீன் தாகர் இசையமைப்பில் உருவான `சிவா ஸ்துதி’ பாடலின் இசையமைப்பைத் திருடி `வீரா ராஜ வீர’ பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தன் மனுவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
ரஹ்மான், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோர் இந்த பாடலைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நிரந்தரத் தடை உத்தரவை விதிக்கக்கோரிய வாசிஃபுதீன் தாகர், இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடுமாறும், தங்கள் தரப்பின் உரிமையை அங்கீகரிக்குமாறும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது, சிவா ஸ்துதி பாடலின் உந்துதலால் `வீரா ராஜ வீர’ பாடல் உருவாக்கப்பட்டதாக ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு, தாகரின் மனு மீது இன்று அறிவிக்கப்பட்ட உத்தரவில், `வீரா ராஜா வீர’ பாடல் `சிவ ஸ்துதி’ பாடலின் இசையமைப்பின் மீது ஏற்பட்ட உந்துதால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், சில மாற்றங்களுடன் உண்மையான பாடலையே அது ஒத்து இருக்கிறது என்று நீதிபதி பிரதிபா எம். சிங் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, ரூ. 2 கோடியை தில்லி நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்தவும், ரூ. 2 லட்சத்தை மனுதாரருக்கு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, படத்தில் நசீர் தாகர், ஸாஹிருத்தீன் தாகர் ஆகியோரின் பெயரை இடம்பெறச் செய்யுமாறும் ரஹ்மான் தரப்புக்கு உத்தரவிட்டார்.