வேட்டையன் படக் காட்சிக்கு எதிர்ப்பு: இயக்குநர் ஞானவேல் மீது புகார்!

கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக..
வேட்டையன் படக் காட்சிக்கு எதிர்ப்பு: இயக்குநர் ஞானவேல் மீது புகார்!
1 min read

வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளதாகக் கூறி இயக்குநர் ஞானவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.

இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று (அக்டோபர் 10 ) வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாகவும், அக்காட்சியை நீக்க வேண்டும் அல்லது படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இயக்குநர் ஞானவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேட்டையன் படம் வெளியான திரையரங்கு ஒன்றில் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. காவல் துறையினர் இதில் தலையிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி தொடர்புடைய சர்ச்சைக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகப் படத் தயாரிப்பு நிர்வாகி உறுதியளித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in