
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட வழக்கில், சகோதரர் ராம்குமாருக்கு உதவ முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. சிவாஜி கணேசனின் பேரன் (ராம்குமார் மகன்) துஷ்யந்த், பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததால் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த வழக்கில் நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அன்னை இல்லம் தன் பெயரில் இருப்பதாகவும் சகோதரர் மற்றும் சகோதரிகள் ஒப்புக்கொண்ட பிறகு வீடு தன் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்காகத் தன் பெயரில் உள்ள வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்பற்ற மூன்றாவது நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராம்குமார் பெற்ற ரூ. 3 கோடி கடனுக்காக ரூ. 150 கோடி மதிப்புடைய சொத்துகளை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பிரபு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, "தாங்களும் தங்களுடைய சகோதரரும் ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள். அவருடையக் கடனைத் தாங்கள் செலுத்திவிட்டு, அவரிடமிருந்து பிறகு பெற்றுக்கொள்ளலாமே" என்று குறுக்கிட்டார்.
இதற்குப் பிரபு தரப்பில் வாதிடுகையில், ராம்குமார் நிறைய பேரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அவருக்கு உதவ முடியாது என்றும் கூறப்பட்டது.
இதைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 8-க்கு ஒத்திவைத்தார்.
வழக்கு விவரம்:
சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்கள் உள்ளார்கள். ராம்குமாரின் மகன் துஷ்யந்தும், அவரது மனைவி அபிராமியும் ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளார்கள்.
ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில், எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3.74 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை 30 சதவீத வட்டியுடன் திருப்பியளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஜெகஜால கில்லாடி படத்தின் தயாரிப்பு பாதியிலேயே நின்றுபோனதால், திட்டமிட்டபடி இந்தக் கடன் தொகை திருப்பியளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் அளித்த புகாருக்கு தீர்வு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடனுக்கான அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 9.02 கோடியை தனபாக்கியம் எண்டர்பிரைசஸுக்கு ஈஷன் நிறுவனம் வழங்குவது மட்டுமல்லாமல், ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கவேண்டும் என்று ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்தாண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ரவீந்திரன்.
ஆனால் நீதிபதியின் உத்தரவுப்படி வட்டியுடன் சேர்த்து கடன் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை. இதை ஒட்டி, நிலுவையில் உள்ள கடன் தொகையான ரூ. 9.39 கோடியைப் பெறும் வகையில், ராம்குமார் தந்தை சிவாஜி கணேசனின் `அன்னை இல்லம்’ வீட்டை ஐப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தனபாக்கியம் எண்டர்பிரைசஸ்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில் மனு தாக்கல் செய்ய ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கினார். ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யாததால், `அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய இன்று உத்தரவிட்டார் நீதிபதி அப்துல் குத்தூஸ்.