

ஆரவ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாக நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரவ் அறிவித்துள்ளார்.
ஓகே கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் நடித்த மாடலும் நடிகருமான ஆரவ் நபீஸ் கிசார், பிக் பாஸ் 1-ல் வெற்றியாளர் ஆனார். அதன்பின் கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித் குமாரின் விடாமுயற்சியில் வில்லனாக நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் நடித்த ராஜபீமா என்ற படம் வெளியானது.
இந்நிலையில், அடுத்த முன்னெடுப்பாக ஆரவ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தயாரிப்பாளர் ஆகியுள்ளார் ஆரவ். இதுகுறித்து அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும். அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு. இந்த பெருமைமிகு அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் என்னை மாற்றியுள்ளது.
இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஆரவ் ஸ்டூடியோஸின் தொடக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆரவ் ஸ்டூடியோஸ் என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும் இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் ஆரவ் ஸ்டூடியோஸ் மூலம் இத்திரைப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Actor and Bigg Boss fame Aarav has announced the his new venture, a production company named Aarav Studios.