வற்புறுத்தி அழைத்தும் பிக் பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை!

நான் கொஞ்சம் வித்தியாசமான ஆள், அதிக கோபக்காரி எது வேண்டுமானாலும் நடக்கும் அதனால் என்னை தவிர்த்து விடுங்கள் என்றேன்.
வற்புறுத்தி அழைத்தும் பிக் பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை!
1 min read

பிக் பாஸுக்கு தன்னை அழைத்தும் அந்த வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகை ரேகா விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் நேற்று (அக். 6) தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகாவுக்கு பிக் பாஸில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தும், அதனை ஏன் மறுத்தார் என்பது குறித்து தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரேகா குறிப்பிட்டுள்ளதாவது

“பிக் பாஸுக்கு என்னை அழைத்தார்கள். ஒவ்வொரு முறையும் பல யூடியூப் சேனல்கள் என் பெயரை இணைத்து விடுவார்கள்.

ஆனால், இம்முறை நேரடியாக அழைப்பு வந்தது. நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று சொன்னேன்.

ஏன் நீங்கள் வரலாமே நீங்கள் வந்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்றார்கள். இல்லை, எனக்கு முகத்தைப் பார்த்து முகத்திற்கு முன்னால் நல்லதையோ கெட்டதையோ சொல்லிவிடுவேன், அதுவும் இல்லாமல் அங்கே வந்து இருப்பதெல்லாம் சாத்தியம் இல்லை. நிறைய சண்டைகள் நடக்கும் நிறைய பிரச்சனைகள் வரும்.

நான் கொஞ்சம் வித்தியாசமான ஆள், அதிக கோபக்காரி எது வேண்டுமானாலும் நடக்கும் அதனால் என்னை தவிர்த்து விடுங்கள் என்றேன்.

மீண்டும் இரண்டு நாள் கழித்து நீங்கள் வந்தால் பிக் பாஸ் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் கருதுகிறார்கள் என்றார்கள். யார் அந்த எல்லோரும் என்று கேட்டேன் மக்கள் தான் என்றார்கள்.

மன்னிக்கவும் மக்கள் எப்போதும் என்னை கொண்டாட மாட்டார்கள், நான் எதை செய்ய வேண்டுமோ அதை வெளியேவே செய்து கொள்கிறேன். அதை மீறி என்னை கூட்டுக்குள் அடைத்து பாட சொன்னால் பாடமாட்டேன் ஆடச் சொன்னால் ஆடமாட்டேன் அடிக்கச் சொன்னால் அடிக்கமாட்டேன். உங்கள் எழுத்துக்களுக்கு என்னால் நடிக்க முடியாது, அதற்குப் பிறகு அவர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

கலந்து கொள்பவருக்கு வாழ்த்துகள் கலக்கிட்டு வாங்க. நான் இதுவரை பிக் பாஸ் பார்த்ததும் இல்லை அது என்ன மாதிரி நிகழ்ச்சி என்றும் தெரியாது. ஏன் என் வீட்டில் டிவியும் இல்லை.

அதனால் பல நிகழ்வுகள் எனக்கு தெரியாமல் கடந்து விடுகிறது, அதில் மகிழ்ச்சி கொள்கிறேன் ஆனால், பிக் பாஸ் பிரபலம் என்று பல பேர் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதை மட்டும் பார்க்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in