

ஏ.ஆர். ரஹ்மான் நேர்காணல் ஒன்றில் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், தான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி செய்தி நிறுவனத்திற்குச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்குப் பட வாய்ப்புகள் குறைவாக வருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சமூகம் குறித்த கருத்தால் சர்ச்சை
அப்போது அவர் கூறியதாவது: ”நான் வேலை தேடி அலையவில்லை. வேலை எனக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அதில் நான் கடைபிடிக்கும் நேர்மை எனக்கான ஊதியத்தைத் தரும் என்று நம்புகிறேன். இப்போது திரைத்துறையில் படைப்பாற்றால் இல்லாதவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். இது நான் சேர்ந்த சமூகத்தைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். அதை நேரடியாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும் என் வதந்தியாக என் காதுகளுக்கு செய்திகள் வருகிறது. என் இசை நிறுவனத்தை முன்பதிவு செய்வது வரை வருபவர்கள் பின்னால் வேறு இசையமைப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். அதுவும் நல்லதுதான். எனக்குக் கிடைக்கும் இந்த ஓய்வில் நான் என் குடும்பத்துடன் செலவிடுவேன்” என்று கூறியிருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் கருத்துக்கு எதிர்ப்பு
இதில் அவர் பாலிவுட் திரைத்துறையை மறைமுகமாகக் குறிப்பிட்டதுபோல் இருந்ததை எடுத்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்துக்கு பிரபல ஹிந்தி திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர், “ஏ.ஆர். ரஹ்மான் கூறியதை நான் ஏற்க மாட்டேன். திரைத்துறை சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக நான் கருதவில்லை. ஏ.ஆர். ரஹ்மானா இப்படிப் பேசியிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ரஹ்மான் பெரிய இசையமைப்பாளர். பலரும் அவரை மதிக்கிறார்கள். அவரை நம்மால் கையாள முடியாது என்று அஞ்சுவதால் கூட அவரிடமிருந்து சிலர் தள்ளி இருந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
கங்கனா ரனாவத் கண்டனம்
அதேபோல், பிரபல ஹிந்தி நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகக் கருத்துப் பகிர்ந்தார். அவரது பதிவில், “ஏ.ஆர். ரஹ்மான் அவர்களே, நான் பாஜகவை ஆதரிப்பாதாலேயே திரைத்துறைக்குள் பலவித பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறேன். ஆனாலும் தங்களைப் போல் பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதில்லை. நான் உங்களிடம் எனது எமர்ஜென்சி படத்தின் கதையைக் கூறி, இசையமைக்கக் கேட்பதற்காக பலமுறை உங்களைச் சந்திக்க முயன்றேன். ஆனால் நீங்கள் என்னைச் சந்திக்கக் கூட விரும்பவில்லை. மேலும் பிரசாரம் சார்ந்த படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று நீங்கள் கூறியதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படம் எதிர்க்கட்சியினராலும் பாராட்டப்படும் வெற்றிப் படமாக ஆகியிருக்கிறது. ஆனால் வெறுப்பு உங்கள் கண்களை மறைத்துவிட்டது. உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை
இந்நிலையில், தனது நேர்காணல் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான காணொளியில் அவர் கூறியிருப்பதாவது: “இசை எப்போதும் இந்திய பண்பாட்டுடன் இணைவதற்கும், அதை கொண்டாடுவதற்கும், மதிப்பதற்குமான ஒரு வழியாகவே எனக்கு இருந்து வருகிறது. இந்தியா தான் எனது ஊக்கம், என் ஆசான், என் வீடு. யாரையும் புண்படுத்த வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதுதான் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது. பல்வேறு பண்பாடுகளின் குரல்களை கொண்டாட வைக்கிறது” என்று கூறியுள்ளார்.
A.R. Rahman addresses his ‘communal’ remark: Never wished to cause pain, hope my sincerity is felt