
அமலாக்கத் துறை விசாரணை முன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த 16 அன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் ஐஏஎஸ், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், எஸ்என்ஜே தொழிற்சாலை மற்றும் சில அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் முறைகேட்டின் மூலம் கிடைதத் சட்டவிரோதப் பணம் திரைத் துறை உள்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவருக்கு திமுக குடும்பத்தினருடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திரைத் துறையில் உதவி இயக்குநராக அறிமுகமான இவர் தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, சிம்புவின் 49-வது படத்தைத் தயாரித்து வருகிறார். இவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியது திரைத் துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால், நடிகர்களும் விசாரணை வளையத்துக்குள் வருவார்களா என்ற பேச்சுகளும் அடிபடத் தொடங்கியுள்ளன. எனினும், அமலாக்கத் துறை சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு உள்ள தொடர்பு குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத் துறை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.