பாலியல் தொல்லை கொடுப்பவரை செருப்பால் அடிக்கணும்: விஷால்

“ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு குழு அமைக்கப்படும்”.
விஷால்
விஷால்
1 min read

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார்.

இதன் பிறகு திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக, இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, ரியாஸ் கான் போன்ற பலர் மீது புகார் எழுந்தது. மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்களில் இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் விஷால், “ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு குழு விரைவில் அமைக்கப்படும்” என்றார்.

விஷால் பேசியதாவது:

“நடிகர் சங்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் நடிகர் சங்கம் துணையாக நிற்கும். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு குழு அமைக்கப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் முதலில் அந்த பெண்ணுக்கு தைரியம் வரவேண்டும், அந்த பெண்மணி அவரை செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு ஒருவரால் நிம்மதியாக வாழ முடியாது. அவருக்கு நிச்சயம் அதற்கான தண்டனை கிடைக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in