நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!
நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!

ஆணவக்கொலை குறித்த கருத்து: நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!

“ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல, அது பெற்றோரின் அக்கறைதான்”.
Published on

ஆணவக்கொலையை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கி நடித்த படம் ‘கவுண்டம்பாளையம்’. இப்படம் சமிபத்தில் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்தார்.

ரஞ்சித் பேசியதாவது:

“ஆணவக்கொலை என்பது ஒருவகையான உணர்ச்சிதான். அதற்கான தீர்வை என்னுடைய படத்தில் கூறியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது, அதில் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள் தான்.

அவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். உங்களின் வாகனம் அல்லது செல்போனை யாராவது திருடிவிட்டால் உடனடியாக சென்று அவரை அடிப்பதில்லையா? அதேபோல தான் இதுவும். தன் வாழ்க்கையே தனது பிள்ளைகள் தான் என்று நினைக்கும் பெற்றோர்களின் கோபமும் ஒருவகை அக்கறை தான்.

ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல, அது பெற்றோரின் அக்கறைதான்” என்றார்.

இந்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில் ஆணவக்கொலையை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாகவும் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, கவுண்டம்பாளையம் படத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், விசிக கட்சியை அவமானப்படுத்தும் வகையிலும் திட்டமிடப்பட்டு காட்சிகள் இடம்பெற்றதாக வன்னியரசு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 10 அன்று படம் வெளியானது.

logo
Kizhakku News
kizhakkunews.in