நீதிமன்றம் என்னை பாதுகாக்கும்: நடிகர் ‘ஏவம்’ கார்த்திக்

இதுபோன்ற கருத்துகளைப் பகிர உடந்தையாக இருந்த யூடியூப் சேனல்கள் மீது குற்றம் சாட்டியுள்ளேன்.
நீதிமன்றம் என்னை பாதுகாக்கும்: நடிகர் ‘ஏவம்’ கார்த்திக்

அவதூறாக பேசுவதற்கும், பொழுதுபோக்கிற்காக பேசுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது என நடிகர் ‘ஏவம்’ கார்த்திக் பேசியுள்ளார்.

பாடகியும், கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவியுமான சுசித்ரா அண்மையில் சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்திருந்தார். இதில், கார்த்திக் குமார் குறித்தும் தமிழ்த் திரைத் துறை குறித்தும் ஏராளமான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், நேர்காணலில் தான் கூறிய கருத்துகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று சுசித்ராவுக்கு கார்த்திக் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், சுசித்ரா பேசியது தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், “என் உரிமைக்காக நான் போராடுகிறேன்” என பேசி கார்த்திக் குமார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது: “கடந்த 7-8 நாள்களாக நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏராளமான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்ததில் குறிப்பிட்ட யூடியூப் சேனல்களுக்கும் பங்குள்ளது. இதனால் நானும் என் குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டோம். இதை சமூக வலைத்தளங்கள் மூலம் சரிசெய்ய முடியாது, எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளேன். நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி என்னையும், என் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற கருத்துகளைப் பகிர உடந்தையாக இருந்த யூடியூப் சேனல்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளேன். அவதூறாக பேசுவதற்கும், பொழுதுபோக்கிற்காக பேசுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. என் உரிமைக்காக நான் போராடுகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in