
யுபிஐ வழியாக மேற்கொள்ளப்படும் மின்னணு முறையிலான பணப்பரிவர்த்தனை முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பயனர்கள் சிக்கலை சந்தித்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்.12) யுபிஐ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம், மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் பெரிதும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
குறைபாடுகளைக் கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் (downdetector) இணையதளம், இது தொடர்பாக அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, நண்பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், யுபிஐ சேவையில் ஏற்பட்ட முடக்கம் தொடர்பாக, தேசிய பேமெண்டஸ் கார்பரேஷன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,
`அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகளை நாங்கள் எதிர்கொண்டு வருவதால், பகுதியளவில் யுபிஐ பரிவர்த்தனைகளின் நிராகரிப்பு ஏற்படுகிறது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக உங்களுக்கு அறிவிப்போம். சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் யுபிஐ அடிப்படையில் இயங்கும் செயலிகளின் சேவை பாதிக்கப்படுவது, இது மூன்றாவது முறையாகும். முன்னதாக மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் யுபிஐ சேவை பரவலாக பாதிப்புக்குள்ளானது.