நாட்டில் மக்கள் இணையப் பரிவர்த்தனையை அதிக அளவு பின்பற்றி வருவதால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில், யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் 121 கோடி பரிவர்த்தனைகளில் ரூ. 18.2 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனவரியில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 18.4 லட்சம் கோடி. பிப்ரவரியை விடவும் ஒரு கோடி குறைவான எண்ணிக்கையில் பரிவர்த்தனைகள் நிகழ்ந்திருந்தாலும் மதிப்பில் உயர்ந்திருந்தது.
தேசியப் பணப் பரிவர்த்தனைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி தினசரி ரூ. 40,000 முதல் ரூ. 80,000 கோடிக்கு யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் சராசரியாக ரூ. 33.85 லட்சம் கோடி மற்றும் ரூ. 146 லட்சம் கோடிகளுக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கியைப் பொறுத்தவரை, ஜனவரி 2024-ல் முறையே ரூ. 91.24 லட்சம் கோடி மற்றும் ரூ. 28.16 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் (2022 தரவுகளின்படி) இன்று இந்தியா கிட்டத்தட்ட 46 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் யுபிஐயின் பங்கு 2023-ல் 80 சதவீதத்தை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
யுபிஐ என்பது நாட்டில் மொபைல் அடிப்படையிலான விரைவான கட்டண அமைப்பாகும், இது வாடிக்கையாளரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் கட்டண முகவரியை (VPA) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் உடனடியாகப் பணம் செலுத்த உதவுகிறது.
இணையப் பரிவர்த்தனை வசதி இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை, இலங்கை, மொரீஷியஸ், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை வளர்ச்சியடைந்து வரும் இக்கட்டண முறைக்காக இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.