
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியான வாகா-அட்டாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், இந்தியாவுடனான ஆஃப்கானிஸ்தானின் உலர் பழங்கள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.22-ல் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல்கட்டமாக நடவடிக்கையாக, அந்நாட்டுனான வாகா-அட்டாரி எல்லை தற்காலிகமாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த எல்லை மூடல் நடவடிக்கையால், ஆஃப்கானிஸ்தானில் இருந்து பொருட்களை சுமந்துகொண்டு பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு வர முயன்ற சுமார் 150 லாரிகள் லாகூருக்கும் வாகாவுக்கும் இடையில் நிற்கின்றன. இந்த லாரிகளில் பெரும்பாலும் உலர் பழங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் உலர் பழங்கள் விலைச்சலுக்கு ஆஃப்கானிஸ்தான் பேர்போன நாடாகும். உலர் பழங்கள் விற்பனை மூலம் பெறப்படும் அந்நிய செலவாணி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. அந்த வகையில், இந்த எல்லை மூடல் நடவடிக்கையால் இந்தியாவுடான அந்நாட்டின் உலர் பழங்கள் வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் மட்டுமல்லாமல், இது இந்தியாவையும் சேர்த்தே பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இரு நாட்டு எல்லைப் பகுதியில் நிலவும் கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உலர் பழங்களின் விலை 10% முதல் 25% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடனான ஆஃப்கானிஸ்தானின் 90% வர்த்தகம் வாகா-அட்டாரி எல்லைப்பகுதி வழியாகவே நடைபெற்று வருகிறது. ஆஃப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக வரும் லாரிகளை அனுமதிக்கக்கோரி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்னணி உலர் பழ வியாபாரியான முகேஷ் சித்வானி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தகவலளித்துள்ளார்.