எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமிகண்டக்டர் சிப்களை கொள்முதல் செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள பிரத்யேக செய்தியில் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதுதொடர்புடை ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இதை வெளியில் கசியவிடாமல் இரு நிறுவனமும் பார்த்துக்கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து டெஸ்லா மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஒப்பந்தம் குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளிவராமல் உள்ளன.
ஆட்டோமொபைல் தொழிலில் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவைக் குறிவைத்து தனது சந்தையை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த மாதம் இந்தியா வரும் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது எலான் மஸ்க் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.