
தனி நபருக்கு தங்க நகை கடன் வழங்குவதற்கான வரைவு விதிமுறைகளை கடந்த ஏப்ரல் 9 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இந்த வரைவு அறிக்கையால் சிறிய அளவிலான தங்க நகைக்கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதிக்கப்படும் என்று கூறி, இவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்பட பல்வேறு தரப்பினரும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பிறகு நேற்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்க நகை கடன் வழங்குவது தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்தார்.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில், பட்டியலிட்ட ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்:
1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
2. ரூ. 2.5 லட்சம் வரையில் கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் `திருப்பி செலுத்தும் திறன்’ பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
3. 2024 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் மறுக்கப்பட்ட, கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) வசதிகள் இனி வழங்கப்படும்.
4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, கடனை புதுப்பிக்கும்போதும் அல்லது கூடுதல் கடன் பெறும்போதும், முந்தைய வழிகாட்டுதலின்படி விதிக்கப்பட்ட தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை மற்றும் கடன் செயல்முறை தொகை (processing fee) புதிதாக விதிக்கப்படாது.
5. தங்க நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப்படியே கடன் வாங்குபவர்கள் `இந்த நகை என்னுடையதுதான்’ என்று ஒரு சுய அறிவிப்பு செய்தால் போதுமானது.
6. ரூ. 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், ரூ. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூ. 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படும்.
7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற ஷரத்து நீக்கப்பட்டுவிட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில்தான் கடன் தொகையை செலுத்தவேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கன் தொகையை வழங்கக்கூடாது.
8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்படவேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்படவேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூ. 5,000 இழப்பீடாக வழங்கவேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேலான தூய்மைகொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும், குறிப்பாக கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியில் இருக்கும்.
மேலும், இந்த புதிய விதிமுறைகள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் (நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள்), வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.