
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் முன்னாள் தலைவர் மாதவி புச் உள்ளிட்ட அதன் முக்கிய அதிகாரிகள் மீது முறைகேட்டில் ஈடுபட்டதற்காகவும், விதிகளை மீறியதற்காகவும் எஃப்.ஐ.ஆர். பதிய உத்தரவிட்டுள்ளது மும்பையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட்டுவது தொடர்பாக மிகப்பெரிய அளவில் நிதி மோசடி மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாக மஹாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவத்சவா அளித்த மனுவின் பெயரில் சிறப்பு நீதிபதி எஸ்.இ. பங்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத ஒரு நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்காக, கார்ப்பரேட் மோசடிக்கு துணைபோனது மூலம் தங்கள் சட்டப்பூர்வ கடமையில் இருந்து செபி அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் சபன் ஸ்ரீவத்சவா.
மேலும், செபி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும், செபி அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுச் சதியின் விளைவால் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும் தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் செபி தலைவர் மாதவி பூரி புச், செபியின் முழு நேர உறுப்பினர்கள் அஷ்வணி பாட்டியா, ஆனந்த் நாராயணன் ஜி, கமலேஷ் சந்திர வர்ஷ்னே, மும்பை பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைவர் பிரமோத் அகர்வால், அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, பிரதிவாதிகள் அனைவரின் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் செபி சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிய உத்தரவிட்டார் நீதிபதி பங்கர்.
இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று செய்திக்குறிப்பு வாயிலாக செபி அறிவித்துள்ளது.