புது வகையான ரூ. 500 கள்ளநோட்டுகள்: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்த நுட்பமான தவறு கவனிக்கப்படாமல் போகலாம், ஆனால் இந்த போலிகள் மிகவும் ஆபத்தானவை.
புது வகையான ரூ. 500 கள்ளநோட்டுகள்: மத்திய அரசு எச்சரிக்கை!
1 min read

புதிய வகையான ரூ. 500 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செபி, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், நிதி நுண்ணறிவுப் பிரிவு போன்ற மத்திய புலனாய்வு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடம், சந்தையில் புழங்கும் புது வகையான ரூ. 500 கள்ளநோட்டுகள் தொடர்பான அதிமுக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கை குறிப்பாணையை அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

தரம், அச்சில் நல்ல நோட்டுகளுக்கு சற்றும் குறைவில்லாமல், கள்ளநோட்டுகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கள்ளநோட்டுகளில் உள்ள ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க எழுத்துப் பிழை மட்டுமே அவற்றை நல்ல நோட்டுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

ரூ. 500 நோட்டுகளில் உள்ள `RESERVE BANK OF INDIA’ என்று வாக்கியத்தில் பிழை காணப்படுகிறது. `RESERVE’ என்ற வார்த்தையில் உள்ள `E’ என்ற எழுத்துக்குப் பதிலாக, `A’ என்ற எழுத்து தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த அதிகாரி ஒருவர், `இந்த நுட்பமான தவறு கவனிக்கப்படாமல் போகலாம், ஆனால் இந்த போலிகள் மிகவும் ஆபத்தானவை’ என்று கூறியுள்ளார்.

புதிய வகை கள்ளநோட்டுகள் தொடர்பாக நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

எத்தனை கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறித்த துல்லியமான தகவல் இல்லை என்றாலும், பெரும் எண்ணிக்கையிலான இந்த கள்ள நோட்டுகளில் ஏற்கனவே சந்தையில் நுழைந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in