இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸின் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜியமாகச் சரிந்துள்ளது.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிகச் சொத்து மதிப்பு கொண்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான 200 இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது.
இதில், பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜியமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பு இவரது சொத்து மதிப்பு ரூ.17,545 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு பூஜியமாகச் சரிந்துள்ளது.
ரவீந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டின் இளம் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
கடந்த ஒரு வருடமாக பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக நிலைமை மிகவும் மோசமானதாகவும், நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
2011-ல் தொடங்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்தது.
நிதி கணக்குகளில் முறைகேடுகள், வருவாய் இழப்பு, கடனுக்கான வட்டித் தொகையைச் செலுத்தாதது எனப் பல வகையில் தொடரப்பட்ட சிக்கல்கள் காரணமாக, பைஜூஸ் நிறுவனம் கடும் சவால்களை சந்தித்தது.
பைஜூஸ் நிறுவனத்தில் வேலை செய்த 500-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.