
8-வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 19,000 வரை உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி குறித்து மதிப்பாய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்க, 10 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள கமிஷம் அமைக்கப்படும். பொருளாதார நிலை, பணவீக்கம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகள் திருத்தி அமைக்கப்படும்.
கடைசியாக, கடந்த 2016-ல் 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டது. அதனால் மத்திய அரசுக்கு ரூ. 1.02 கோடி செலவானது. 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜூலை 2016-ல் சம்பளங்களும், ஓய்வூதியங்களும் திருத்தப்பட்டன, அதேநேரம் ஜனவரி 2016 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.
தற்போது, சராசரியாக ஒரு இடைநிலை மத்திய அரசு ஊழியருக்கு மாதத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வெவ்வேறு பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பின்வருமாறு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
ரூ. 1.75 லட்சம் கோடி ஒதுக்கீடு: சராசரி மாத சம்பளம் ரூ. 1,14,600 ஆக உயரக்கூடும்.
ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு: சராசரி மாத சம்பளம் ரூ. 1,16,700 ஆக உயரக்கூடும்.
ரூ. 2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு: சராசரி மாத சம்பளம் ரூ. 1,18,800 ஆக உயரக்கூடும்.
இந்த கணிப்பின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 19,000 வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இதுவரை 8-வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், மத்திய அரசு ஏப்ரல் 2025-ல் சம்பள கமிஷனை அமைக்கலாம் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027-க்குள் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.