கோப்புப்படம் படம்: https://x.com/ilaiyaraaja
சினிமா

வனிதா விஜயகுமாரின் Mrs & Mr படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு | Vanitha Vijayakumar | Ilaiyaraaja

அனுமதியின்றி பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தில் 'சிவராத்திரி' என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar) இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr). இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், கிரண், ஆர்த்தி கணேஷ், ஷகீலா, ஸ்ரீமான் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் படத்தைத் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் ஜனவரி 16 அன்றும் டிரெய்லர் கடந்த மே 25 அன்றும் வெளியான நிலையில், மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.

மேலும் படிக்க: குட் பேட் அக்லி: தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

இந்தப் படத்தில் மைக்கேல், மதன, காம, ராஜன் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிவராத்திரி' பாடல் இடம்பெற்றுள்ளது. இதன் பாடல் வரிகள் வீடியோ கடந்த மாதம் 23 அன்று வெளியானது. இப்பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்தப் பாடல் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என இளையராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்பாடல் வெளியாவதற்கு முன் ஜூன் 22-ல் இளையராஜாவைச் சந்தித்து ஆசி பெற்றதாக போஸ்டர் வெளியானது. 'ராகதேவன் இசைஞானியின் நல்லாசியுடன் சிவராத்திரி தூக்கம் ஏது ஜூன் 23 முதல்' என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டருடனான பதிவில், "சூப்பர்ஹிட் படமான மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்றுள்ள சோனி மியூசிக் சௌத் உரிமம் பெற்றுள்ள பிளாக்பஸ்டர் ஹிட் பாடல் நாளை வெளியாகிறது" என்று வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.