பாரிஸ்: கருக்கலைப்பு தொடர்பான உரிமைகளை தனது அரசியல் சாசனத்தில் அங்கீகரித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 780-72 என்கிற வகையில் இந்தச் சட்ட மசோதா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பை மாற்றுவதற்குத் தேவையான ஐந்தில் மூன்று பங்குப் பெரும்பான்மையை மசோதா பூர்த்தி செய்தது.
இந்த சட்ட மசோதா இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டால் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தின்படி, கருக்கலைப்பு என்பது பிரான்ஸில் "உத்தரவாதமான சுதந்திரம்" ஆகும். சட்டமன்ற உறுப்பினர்களும் சில குழுக்களும் கருக்கலைப்பை ஓர் "உரிமை" என்று தெளிவாகக் குறிப்பிடும் சொற்களுக்கு அழுத்தம் கொடுத்தன. அமெரிக்காவிலும், ஹங்கேரி போன்ற ஐரோப்பியப் பிராந்தியங்களிலும் கருக்கலைப்பு உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் பிரான்ஸில் இந்தச் சட்ட மசோதா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு முடிவுகளுக்குப் பிறகு ஈபிள் கோபுரத்தில் "எனது உடல், எனது விருப்பம்" ஒளிரச் செய்யப்பட்டது.