பாகிஸ்தானின் 24-வது பிரதமராக ஷெபாஸ் ஷரிஃப் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாடு முழுக்க பிடிஐ கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஷெபாஸ் ஷரிஃப் பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப், முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஸர்தாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ-ஸர்தாரி, முப்படைகளின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் சிந்த், பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாண முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது. 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில் வெற்றிக்கு 169 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் 201 வாக்குகளைப் பெற்றார் ஷெபாஸ் ஷரிஃப். பிடிஐ மற்றும் சன்னி இடெஹத் கவுன்சில் வேட்பாளர் ஓமர் ஆயுப் கான் 92 வாக்குகளை மட்டுமே பெற்றதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்தார்.