அரசின் ரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுல் ஹஸ்னாத் ஸுல்கர்னைன் சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அரசின் ரகசியங்களைக் கசியவிட்டதாக இருவர் மீதும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனம் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கடந்த மாதம் மீண்டும்ல புதிதாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
விசாரணையின் முடிவில் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு குறித்து இம்ரான் கானின் பிடிஐ கட்சி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"சைஃபர் வழக்கைவிட அபத்தமான வழக்கு எதுவும் இருக்க முடியாது. அயல்நாட்டுச் சதியை அம்பலப்படுத்தியதற்காகப் பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும், பாகிஸ்தான் சிறையில் அடைத்திருப்பதைவிட கேலிக்கூத்து வேறு என்ன இருக்க முடியும்."