ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தங்களுடைய வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இருநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை மதுரையிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் இன்று காலை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது சுமார் 15 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
"உண்மை கசக்கதான் செய்யும். ஆனால், அதைப் பேசுவது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நான் நேரடியாகக் குற்றம்சாட்டுகிறேன். மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகளைதான் நான் இங்கு திட்டங்களாகக் கொண்டு வந்துள்ளேன். இன்று மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள்தான் அன்று தில்லியில் அதிகாரத்தில் இருந்தார்கள். ஆனால், உங்களுடைய வளர்ச்சி குறித்து அவர்கள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை.
அவர்கள் தமிழ்நாடு குறித்து பேசினார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்குத் துணிச்சல் இல்லை. மாநிலத்தின் தலையெழுத்தைத் திருத்தி எழுதுவதற்காக இந்த சேவகன் இன்று தமிழ்நாட்டுக்கு மண்ணுக்கு வந்துள்ளான்.
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் இன்று தொடங்கியுள்ளது. பல்வேறு திட்டங்கள் இங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்த இந்தியாவுக்கான வளர்ச்சிப் பாதையில் இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் திட்டங்கள் தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்டாலும், நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் வளர்ச்சிக்கான உத்வேகத்தை இது அளிக்கும்" என்றார் பிரதமர் மோடி.