முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ல் தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்தார். அப்போது வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் ஐ. பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். பிப்ரவரி 13-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை தீர்ப்பளித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்தது செல்லாது என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்புடைய வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1 லட்சத்துக்கு பிணை செலுத்துமாறு ஐ. பெரியசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.