போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த 3 மாதங்களில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளதாகவும், இந்தக் கடத்தல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. இந்தச் செய்தி வெளியானதும் திமுகவினுடைய சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஜாஃபர் சாதிக் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், தில்லியில் கைது செய்யப்பட்ட மூவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.