மக்களவைத் தேர்தலுக்கான திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இரு கட்சிகளுக்கு இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர். பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத் தலைமையிலான மத்தியக் குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் இருந்ததாக சம்பத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"இரு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. விரைவில் நல்ல உடன்பாடு வரும். அந்தச் செய்தியை உங்களிடம் விரைவில் தெரிவிப்போம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் விரைவில் தெரிவிக்கிறோம்." என்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.